தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளபகுதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, விரிச்செட்டிபள்ளி கிராமங்கள். இங்கு காப்புக்காட்டு வனப்பகுதி உள்ளன. இந்த காப்புக்காட்டு பகுதிக்கு காட்டு யானைகள் உட்பட வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம். இந்த காப்புக்காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இதனால் கல்லப்பாடி முதல் விரிச்செட்டிபள்ளி வரை உள்ள வனப்பகுதியில் குடியாத்தம் வனத்துறையினர் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.அதோடு இங்கு ஆடு, மாடுகளை மேய்க்க வரும் பொதுமக்களும் காட்டுக்குள் வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் வனத்துறை அலுவலர்களுக்குத்தகவல் தெரிவிப்பார்கள்.
இந்நிலையில் இன்று விரிச்செட்டிபள்ளி காப்புக்காட்டுப் பகுதியில், மரம் அறுக்கும் சத்தம் கேட்டுள்ளது.மரம் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் காப்புக்காட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஆறு செம்மரங்களை வெட்டியுள்ளதும், அதனை 11 துண்டுகளாக்கியதும் தெரியவந்தது. கடத்த முயன்ற 11 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
காப்புக்காட்டுக்குள் வந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார்? இங்கு செம்மரங்கள் இருப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது?மரம் வெட்டும் வரை வனத்துறை கார்டு, ரேஞ்சர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? இதுதவிர காட்டுக்குள் வேறு ஏதாவது செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.