
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மீன்பிடிபொருட்கள் பறிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டது. 15க்கும் மேற்பட்ட கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி அட்டூழியம் செய்ததாக மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பே இதேபோல் கடந்த 11 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நான்கு படகுகளில் சுற்றிவளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நான்கு மீனவர்களை தாக்கி 400 கிலோ வலைகள், செல்போன்கள் என இரண்டு லட்சம் மதிப்புடைய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஜயேந்திரன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். இப்படி ஒரே நாளில் இலங்கை கடற்படையாலும், கடற்கொள்ளையராலும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.