Skip to main content

ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதில் முறைகேடு!- ஒருவர் கைது!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்தம் எடுத்து செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று அதனை குறிப்பிட்ட ஏ.டி.எம்களில் நிரப்புவதோடு இல்லாமல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை சரி செய்யும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
 

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கணக்குகள் கடந்த 29.09.2016 அன்று தணிக்கை செய்யப்பட்டதில் ரூபாய் 22.97 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனம் நடத்திய விசாரணையில் தணிக்கை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக நிறுவனத்தில் பணக்காப்பாளர் வேலையிலிருந்து நின்ற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை என்பவரின் மகன் சுதாகரனுக்கு (41) தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ATM MONEY ISSUES ONE PERSON ARRESTED CUDDALORE POLICE

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  பின்னர் இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த விசாரணையில் பணக்காப்பாளரான சுதாகர், அவருக்கு பயிற்சி அளித்த மற்றொரு பணக்காப்பாளர் சிவக்குமார்,முன்னாள் பணக்காப்பாளர் பணியிலிருந்த சம்பத்குமார், சுதாகரின் நண்பர் கனகராஜ் என 6 பேர் கூட்டு சேர்ந்து ஆறு மாதத்தில் 22,97,200 ரூபாயை கையாடல் செய்தது தெரியவந்தது. இந்த பணம் விருத்தாசலம் முதல் மங்கலம்பேட்டை வரையிலான 14 ஏ.டி.எம் இயந்திரங்களில் மங்கலம்பேட்டை, பூவனூர் உள்ளிட்ட மூன்று இயந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் கணக்கு காட்டியுள்ளனர்.  


இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணியிலிருந்து விடுவித்துக்கொண்ட சுதாகர் அன்றைய நாளில் ரூபாய் 5 லட்சத்தை விருத்தாசலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்மில் நிரப்பி உள்ளார். எனவே மீதமுள்ள ரூபாய் 17.97 லட்சம் மோசடியாக கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  


இதற்கிடையில் கனகராஜ், சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் பூதாமூருக்கு வந்திருந்த சுதாகரை குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் கைது செய்து விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


இது போன்று முறையாக ஏ.டி.எம்களில் பணம் நிரப்பப்படாதல் தான் பல்வேறு காலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.