திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரத்தில் .இரண்டு இடம், போளுர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு இடம் என 4 இடங்களில் ஏ.டி.எம் மையத்தில் மிஷின்களை உடைத்து அதிலிருந்து பணத்தினை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. 72.5 லட்சம் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கொள்ளை நடந்த நாளன்று இரவு ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள், போளுர், கலசபாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலா இரண்டு காவலர்கள் உட்பட 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம், ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் மீது மென்மையான நடவடிக்கை எடுத்துள்ள உயர் அதிகாரிகள், ரோந்துப் பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று காவல்துறையைச் சேர்ந்த சிலரே கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மாவட்டம் முழுமைக்கும் இரண்டு டி.எஸ்.பிக்கள், ஒவ்வொரு நகரத்துக்கும் பேரூராட்சிக்கும் இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிக்கு டூட்டி போடப்படுகிறது. இதில் காவலர்கள் மட்டுமே ரோந்துப் பணியை செய்கிறார்கள். அதிகாரிகள் செய்வதேயில்லை. அதிகபட்சம் 12 மணியோடு ரோந்துப் பணியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.