--LINKS CODE------
கடந்த 17ஆம் தேதி சந்திரகிரகணம் என்பதால் அதற்கு பின்நடை திறக்கப்பட்டு சாமிதரிசனம் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தநாள் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பெருமாளின் நட்சத்திரமான திருவோணநட்சத்திரம் என்பதால் 18ஆம் தேதி மூன்று மடங்கு கூட்டம் அதிகரித்தது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்த வண்ணம் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனாலும் கூட்டத்தால் வாலாஜாபாத் வரை சுமார் 10 கி.மீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மயங்கிவிழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் உள்பட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை 24 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனி கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அத்திவரதரை முதியோர், உடல் நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் முடிந்தவரை அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரம் பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.