திருச்சி மாவட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் சரத்குமார்(24) என்பவர் திருமணத்திற்கான மண்டப அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது, லாரியில் வந்த அலங்கார பொருட்களை இறக்கிவைக்க சென்றுள்ளார். அப்போது, லாரியில் இருந்து இரும்பு குழாய் இறக்கி வைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள இ.பி லைனில் இரும்பு குழாய் பட்டு, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில், பிரேத பரிசோதனை செய்து கொடுக்க பணம் வேண்டும் என்று உதவி ஆய்வாளர் சேகர் கேட்டதாக கூறப்படுகிறது. சரத்குமாரின் உறவினர்களும் 5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், இது போதுமானதாக இல்லை என்று கூறி கூடுதலாக கேட்டுள்ளார். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரியவந்ததையடுத்து அவரை ஆயுதபடைக்கு மாற்றி உத்தரவிட்டார்.