
சேலத்தில் 4ஆவது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியாக பொன்பாண்டியன் பதவி வகிக்கிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல வழக்குகளை விசாரிப்பதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நீதிபதி பொன்பாண்டியனை கத்தியால் குத்த முயற்சித்தார். பொன்பாண்டியன் உடனடியாக சுதாரித்தும்கூட, அவர் உடலில் லேசான கத்தி குத்து விழுந்தது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள், பிரகாஷை சுற்றிவளைத்தனர்.
பின்னர், பிரகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பணி மாறுதலால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், எனவே அதற்கு காரணமான நீதிபதியை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்து பொன்பாண்டியனை கத்தியால் குத்த முயற்சித்ததாகவும் தெரிவித்தார். தற்போது பிரகாஷ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.