Skip to main content

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம்; உதவிப் பொறியாளரை கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்!!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Assistant engineer bribed to get new electrical connection! Anti-corruption police caught

 

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே உள்ள பரமத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி. இவர், அரசு மானியம் பெற்று வீடு ஒன்றை பரமத்தேவன்பட்டியில் கட்டி வருகிறார்.

 

இந்த வீட்டிற்குப் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊரக பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய மின் இணைப்பு தொகையான 2,800 ரூபாய் செலுத்தியுள்ளார். இதனையடுத்து புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக அங்கு பணியாற்றக் கூடிய மின்வாரியத் துறை உதவிப் பொறியாளர் பூமிநாதன் என்பவர் சின்னபாண்டியிடம் ரூபாய் 7,000 வரை தரவேண்டுமெனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

 

பின்னர் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் கொடுத்தால் புதிய இணைப்பு தந்து விடுவதாகவும் பூமிநாதன் கூறியுள்ளார். அதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்திய சீலனிடம் நேரடியாகச் சென்று மின்வாரியத் துறை அதிகாரி லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளித்துள்ளார் சின்னப்பாண்டி. இந்த புகாரை அடுத்து பூமிநாதனை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று சின்னபாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரூபாய் 2,700 கொடுத்து அனுப்பியுள்ளனர். 

 

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் கீதா மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகள் சின்னமனூரில் உள்ள மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அருகே மறைந்து கொண்டனர். தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சின்னபாண்டி கொண்டுச்சென்று உதவிப் பொறியாளர் பூமிநாதனிடம்  கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்து உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பூமிநாதன் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்தனர்.

 

பின்னர் உடனடியாக லஞ்சம் பெற்ற பூமிநாதனை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் உதவிப் பொறியாளர் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் சின்னமனூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

வெடித்துச் சிதறிய மின் வயர்கள்! - பயங்கர விபத்து தடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Exploded electrical wires! Terrible accident prevention!

 

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், இரண்டாவது வார்டு பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பத்தில் உள்ள வயர்கள் பட்டாசு போல் வெடித்துச் சிதறியது. குடியிருப்பின் வாசல் அருகே இருந்த மின்கம்பத்தில் தீவிபத்து ஏற்பட்டு வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தச் சத்தம் கேட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். 

 

சுமார் அரை மணி நேரமாகத் தொடர்ந்து பட்டாசு தீப்பொறி பறப்பது போல் தீயானது மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து அருகே உள்ளவர்கள் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த தீ விபத்து கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் தொடர்ந்து எரிந்து வந்தன. இதனை அங்கிருந்த பொதுமக்கள் மணலைக் கொண்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். 

 

இந்த தீவிபத்து காரணமாக பூவிருந்தவல்லி இரண்டாவது வார்டு முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு மத்தியில் நடைபெற்ற இந்த மின் விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.