Skip to main content

ஹோட்டலில் நடக்கும் சட்ட விரோத செயல்கள்; கண்டுகொள்ளாத உதவி ஆணையர்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Assistant Commissioner in Trichy who did not detect illegal activities

 

திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகில் ஹோட்டல்  அன்பு பார்க் செயல்பட்டு வருகிறது. ஹோட்டலின் 4வது மாடியில் பஃப் மற்றும் ஸ்பா அனுமதியின்றி செயல்பட்டு வந்தது. இங்கு இளம் வயதுடைய ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் வந்து மது அருந்துவர். அப்பொழுது மது போதையில் அடிக்கடி தகராறு நடப்பதால் காவல்துறைக்கு புகார்  சென்றது.     

 

இதனை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் அங்கு சென்று அதிரடி  சோதனை நடத்தி எந்த உரிமமும் பெறாமல் செயல்பட்டு வந்த அந்த பப்பிற்கு சில மாதமும் முன்பு சீல் வைத்தார்.  தற்பொழுது மாநகரில் உள்ள ஸ்பா மற்றும் பப்புகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக முறைகேடாகவும் உரிமம் இல்லாமல் செயல்படும் ஸ்பா மற்றும் பப்புகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.      

 

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சீல் வைக்கப்பட்டிருந்த அன்பு பார்க் ஹோட்டலில் உள்ள பஃப் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.  தகவலறிந்த துணை  ஆணையர் செல்வகுமார் அன்பு பார்க் ஓட்டலில்  உள்ள பப்பிற்கு சாதாரண உடையில் சென்று பார்த்த போது அதிர்ச்சி  அடைந்தார். அங்கே இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் மதுபானம் அருந்தி நடனமாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.    

 

ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பஃப்  மீண்டும் எப்போது திறக்கப்பட்டது  என்பது குறித்து அங்குள்ள ஊழியிடம் கேட்டறிந்த துணை  ஆணையர், ஹோட்டலுக்கு வெளியே  நின்று கொண்டிருந்த மற்ற காவலர்களை அழைத்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோரை அதிரடியாக  கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு பிடித்துச் சென்றார்.  இதனால் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அரசு அதிகாரிகளும், சில முக்கிய பிரமுகர்களும் சிக்கி கொண்டனர்.      

 

இதில் மது போதையில் இருந்த இளம் பெண்களை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல் அதிகாரிகள், அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இந்த அன்பு ஸ்பா மற்றும் கிளப்பில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சட்ட விரோதமாக திறக்கப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இப்பகுதியில் உதவி ஆணையராக இருக்கும் கென்னடி எந்தவித சட்டவிரோதமான செயல்களையும் கண்டுகொள்ளாமல், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. துணை ஆணையர் நடத்திய சோதனையில் கூட அவர் தகவல் அறிந்து மெதுவாக தான் வந்திருக்கிறார்.   

 

இது போன்ற சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுக்க வேண்டிய உதவி ஆணையர் அதைப்பற்றி கவலைப்படாமல் பணம் வசூல் செய்வதிலும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும், இது போன்ற அதிகாரிகளால் மாநகரில் தொடர்ந்து சட்ட விரோதமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. எனவே உயர் அதிகாரிகள் காவல்துறையில் உள்ள இது போன்ற கருப்பு ஆடுகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சட்ட விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டபோது, “இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.