Skip to main content

அருப்புக்கோட்டையில் தீ விபத்து! எரிந்து சாம்பலான ஏ.டி.எம். மையம்!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

  

பணத்துக்குப் பாதுகாப்பு என்று கருதியே மக்கள் வங்கிக்குச் செல்கின்றனர். இந்தநிலையில், மக்களின் பணத்தை வங்கிகள் வைத்திருக்கும் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. கொள்ளையர்களால் உடைக்கப்படுவதில் ஆரம்பித்து தீ விபத்து ஏற்படுவது வரை பாதுகாப்பற்ற நிலையில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.  

 

a

 

இன்று அருப்புக்கோட்டையில் பூட்டியிருந்த எச்.டி.எப்.சி. ஏ.டி.எம். மையம் பற்றி எரிந்தது. ரூ.7 லட்சம் வரையிலும் பணம் இருந்ததாகக் கூறப்படும் அந்த ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு மின்கசிவே காரணமாக இருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர். மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. மையத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன், தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

 

இரவு நேரத்தில் அந்த எச்.டி.எப்.சி. ஏ.டி.எம். மையத்தை பெரும்பாலும் பூட்டிவிடுவது வழக்கமாம். காவலாளி வெளியில் இருந்தபோதுதான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால்தான், மின்கசிவு என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். தீ விபத்து நடந்த ஏ.டி.எம். மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்துவதற்கு நாளை சென்னையிலிருந்து அதிகாரிகள் வரவிருக்கின்றனர். 

 

மின்கசிவால் ஏற்படும் தீ விபத்து குறித்து சற்று விரிவாகவே பேசினார் அந்த மின்பொறியாளர் - 
“மின்சார விபத்துகள் திடீரென்று உருவாகிவிடாது. மின்சாரத்தின் பல்வேறு காரணிகள் மூலம் பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட கூறுகளின் விளைவாகத்தான் திடீரென்று தீ விபத்து ஏற்படுகிறது. மின்சாதனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் பல்வேறு மின் பயன்பாட்டு குறியீடுகள் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, மின் அழுத்தம், மின் பயன்பாட்டில் வேறுபாடு, மின்கசிவு, மின் அழுத்தத்தில் வேறுபாடு என்றெல்லாம் இருக்கின்றன. இவற்றை, தகுந்த எலக்ட்ரிகல் ஆடிட் மூலம் கண்டறிந்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் தவிர்த்திட முடியும். 

 

a


மின்கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்படுகின்ற தீ விபத்துக்களில் தேசிய அளவில் மஹராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். பரபரப்பாக இயங்கும் இன்றைய காலக்கட்டத்தில், மின்கசிவு மற்றும் ஷார் சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்றே கருத நேரிடுகிறது.” என்றார் ஆதங்கத்துடன்.   

 

‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று சினிமாவுக்கு டைட்டில் வைக்கிறோம். ஆனால், மின்சாரம் குறித்த புரிதலின்றி தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கு நாமும் ஒருவகையில் காரணமாக இருந்துவிடுகிறோம். அதனால்,  மின்கசிவு விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.