Skip to main content

ஜாமீனில் வந்த ஆருத்ரா முகவர்; சூறையாடப்பட்ட தம்பதியின் வீடு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Arudra administrator who seized the house

 

சென்னையை மையமாகக் கொண்டுள்ள ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கிளை அமைத்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களிடம் ஒரு லட்சம்  முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்தது. அப்போது இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 2 ஆயிரத்து 438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம் உறுதியளித்தபடி நடந்துகொள்ளாமல் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய மோசடி செய்தது.

 

இந்நிலையில், ஆருத்ரா நிறுவனம் மீது தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட  12 பேரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி ஆகிய பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்தவர் நாகராஜ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜெம் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் - சுகுணா தேவி என்ற வயதான தம்பதியின் வீட்டை ரூ. 26 லட்சத்திற்கு தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதில் ரூ. 6 லட்சத்தை ஸ்டீபனின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ. 20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

 

இதையடுத்து, 20 லட்ச ரூபாய் முதலீடு செய்த தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் தவணை பணம் கொடுத்துள்ளார். அதன்பிறகு, 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆருத்ரா மோசடி அம்பலமாகி வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த நாகராஜ் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய சூழலில், தற்போது ஜாமீனில் வெளிவந்த நாகராஜ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிவிக்காமல் தன்னுடைய சொத்துகளை விற்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், ஸ்டீபன் - சுகுணா தேவி தம்பதியின் வீட்டை அபகரிப்பதற்காக தன்னுடைய அடியாட்களை அனுப்பி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்ற நாகராஜின் அடியாட்கள் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி அராஜகம் செய்துள்ளனர்.

 

மேலும், அந்த வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசிவிட்டு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அதே சமயம், ஆருத்ரா முகவர் முதியவரின் வீட்டை காலி செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா போலீசார், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட நாகராஜை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். பட்டப்பகல் நேரத்தில் நடந்த இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.