Skip to main content

தமிழகத்தில் போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதேயில்லை என்ற பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு: அன்புமணி

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
d

 

திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.  கலைஞரின் மறைவை அடுத்து அன்புமணி ராமதாஸ் எம்.பி.  இரங்கல் விடுத்துள்ளார்.

 

’’இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ஐந்து முறை அலங்கரித்தவரும், திமுக தலைவருமான கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். இந்த சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை.

 

தமிழக அரசியல் வரலாற்றை எழுதினால் அதில் அதிக பக்கங்களை கலைஞருக்காகத் தான் ஒதுக்க வேண்டும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கம் அவர். அண்ணாவையும், காமராசரையும் போலவே அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து தமது திறமை, உழைப்பு, தொண்டர்களை கவர்ந்திழுக்கும் பேச்சு ஆகியவற்றால் மட்டுமே உச்சத்தை அடைந்தவர். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மத்திய ஆட்சியாளர்களுக்கு பணிந்து தான் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்த கலைஞர், இந்திரா காந்தி, வி.பி.சிங். வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்களின் மரியாதையைப் பெற்றவர். மேலும், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் போன்றோர் பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். கடந்த 50 ஆண்டுகளில் பிரதமர்களாக இருந்த அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் கலைஞர்.

 

மாநிலங்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர், மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் என கலைஞரின் அரசியல் சாகசங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தமிழக மக்களின் நலன்களுக்காகவும், சமூக நீதியைக் காப்பதற்காகவும் மிகக்கடுமையாக உழைத்தவர். தமிழகத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் கட்டுமானங்கள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர். அரசியலில் வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்த்தவர். தமிழக அரசியலில் எத்தனையோ புயல்கள் வீசிய போதிலும், அவற்றுக்கெல்லாம் அசையாமல் 50 ஆண்டுகள் தலைவராகவும், 80 ஆண்டுகள் திமுக மற்றும் திராவிடர் கழக நிர்வாகியாகவும் களப்பணி ஆற்றியவர். தமிழகத்தில் போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதேயில்லை என்ற பெருமை திமுக தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், அக்கறையும் காட்டியவர். அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் நான் நிறைவேற்றினேன். தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், அவற்றைத் தீர்த்து மருத்துவக் கல்லூரியை  திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று அக்கல்லூரியை தமிழக அரசு திட்டமிட்டிருந்த காலத்திலேயே அக்கல்லூரியை திறக்க வகை செய்தேன்.  மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அந்த அளவுக்கு அக்கறை கொண்டவர் கலைஞர்.

திமுக தலைவர் கலைஞரின் மறைவு திமுகவுக்கும், திமுக தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.