Skip to main content

“கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்”-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

 

இன்று (10.12.2021) சென்னை ரிப்பன் மாளிகையில், கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர், சுகாதரத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சி வளாகத்தில் அறநிலையத்துறை அமைச்சர், சுகாதரத்துறை அலுவலர்கள், ஆணையர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் துணைவேந்தர்கள் என ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நேற்றைக்கு அண்ணா பல்கலைகழகத்தில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆறாம் தேதி அங்கு ஒரு மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி சார்பில் 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 

அதில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில் கிங் இன்ஸ்டியுட் வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதே போல் விடுதிகளில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதிக்க முடிவெடுக்கப்பட்டு நேற்று பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் ஒன்பது பேரை தவிர்த்து மற்றவர்கள் யாருக்கு தொற்று தென்படாதது மகிழ்ச்சியான ஒன்று. இந்நிலையில் இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 18 வயதை கடந்த அனைத்து மாணவர்களும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

 

மேலும் ஐ.ஐ.டி, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரிகளிலும் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே வகுப்பிற்கு அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம். அதே போல் உணவகங்களுக்கு கூட்டமாக அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் அதற்குரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி மறு உத்தரவு வரும்வரை டிஸ்போசல் தட்டுக்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ரொம்ப முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிய அனுமதியினை பெற்று கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வகுப்பறைக்குள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வகுப்பறை வாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், தடுப்பூசி போடாதவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்ககூடாது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏனென்றால் மாணவ சமுதாயம் தான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய சமூகம் எனவே அங்கிருந்தே இந்த பணியை நூறு சதவீதம் துவங்கிட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.