அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் ஆதாரமற்றது என வாட்ஸ் - ஆப்பில் மறுப்பு தெரிவிப்பதாக உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்ததால் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டம் மக்களுக்கு உகந்தது அல்ல எனவும், இந்தத் திட்டத்தால் பல நோய்கள் பரவும் எனவும் சோலார் திட்டம் குறித்து பலதவறான தகவல்களை கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் வாட்ஸ் -ஆப்பில் பரப்பியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாகீர் உசேன் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, மனுதாரர் பரப்பிய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பொய்யான தகவல் பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளது என வேதனை தெரிவித்தார்.
மனுதாரர் தன் தவறை உணர்ந்து, தான் பரப்பிய தகவல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பரப்பியதாக, அதே வாட்ஸ் -ஆப் குரூப்பில் பதிவிட சம்மதித்தால், அவருக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,தான் வாட்ஸ் - ஆப்பில் அனுப்பிய தகவல் தவறானது,ஆதரமற்றது என வாட்ஸ் அப் மூலம் மறுப்பு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜாகீர் உசேனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.