Skip to main content

வீடியோ ஆதாரத்துடன் நக்கீரன் அம்பலப்படுத்திய மோசடி!  விஜயநல்லதம்பி கைது!    

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

Arrested person who defrauded Rs 3.5 lakh by claiming to buy food jobs

 

பலரிடம் பண மோசடி செய்வது, மோசடி புகாருக்கு ஆளாகி கைதாவது, பிறர்  மீது மோசடி புகார் தருவதெல்லாம் விஜயநல்லதம்பி வாழ்க்கையில்  வாடிக்கையாக நடந்துவருவதுதான். தற்போது சத்துணவு வேலை வாங்கித்  தருவதாக ரூ.3.5 லட்சம் மோசடி செய்த புகாரில் கைதாகியிருக்கிறார்  விஜயநல்லதம்பி.   

 

விஜயநல்லதம்பி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி என்பதும்,  தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்  ரவிச்சந்திரனின் தம்பி என்பதும் தெரிந்ததே. மேலும் இவர்,  பஞ்சாயத்து  தலைவர், யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்,  அதிமுக  வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராகவும்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசு  வழக்குரைஞராகவும் இருந்துள்ளார்.   இப்படியொரு அழுத்தமான பின்னணி உள்ளவர் என்பதால், எத்தனை மோசடி  புகார்கள் வந்தாலும், விஜயநல்லதம்பி விஷயத்தில் காவல்துறை அத்தனை  கடுமை காட்டுவதில்லை. மேலும், நீதித்துறை வட்டாரத்தில் பெரிய அளவில்  முன்பிருந்த பழக்கத்தின் காரணமாக, விஜயநல்லதம்பியை காவல்துறை நெருங்குவதற்கு முன்பாகவே, அவருக்கு தகவல் போய்விடும் என்று கூறப்படுகிறது.   

 

கடந்த 2022ல், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் விஜயநல்லதம்பி, தன்  அண்ணன் ரவிச்சந்திரன் மீது மோசடி புகார் அளித்திருந்தார். அதில், அரசு  வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.68 லட்சத்தை வாங்கி,  ரவிச்சந்திரன் ஏமாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.  ஏமாற்றப்பட்ட 7  பேரும் விஜயநல்லதம்பிதான் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாகப்  பணம் வாங்கினார் என்று கூறிவிட, அது விஜயநல்லதம்பி அளித்த பொய்ப்புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது.   தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த தங்கதுரையின் மனைவி  கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.5  லட்சத்தை வாங்கிய விஜயநல்லதம்பி ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும்  விடுத்தார். கடந்த 1-10-2020 அன்று விஜயநல்லதம்பியிடம் ரூ.3.5 லட்சத்தைக் கொடுத்தபோது, கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், ரகசியமாகத் தனது  செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார்.    

 

கடந்த 20-8-2020 அன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கிருஷ்ணவேணி  அளித்த புகார் மீதான விசாரணையைத் தொடர்ந்து, விஜயநல்லதம்பி மீது  பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு  பிரிவுகளில் வழக்கு பதிவானது. மேலும் பலர் விஜயநல்லதம்பி மீது புகார்  அளித்திருக்கும் நிலையில், விஜயநல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

கிருஷ்ணவேணி தரப்பிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி  விஜயநல்லதம்பி பணம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவை,  முதன்முதலில்  3-12-2022ல்   ‘அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ  ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, அந்த  மோசடியை அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம்.   ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கைதாகி நிபந்தனை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவர் மீது  மோசடி புகார் அளித்தது விஜயநல்லதம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

நிர்மலா தேவி வழக்கு; ‘தண்டனை விவரம் எப்போது’ - நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது. 

Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று (29.04.2024) வழங்கியுள்ளது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் பேசுகையில், “நிர்மலா தேவி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து விவாதம் செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வர சொன்னார்கள். கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்றோ, நாளையோ வெளியாகலாம்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலாதேவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பு எதிரிகள் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கபடவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு போதுமான தண்டனைகள் வழங்கக்கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. எனவே இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.