
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் கடந்த விசாரணையின் போது நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (04.06.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் வாதிடுகையில், “இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும். இது பொய் வழக்கு ஆகும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடர்பான விசாரணையை நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் இந்த வழக்கைத் தொடர வருண் குமாருக்கு முகாந்திரம் உள்ளது. அதனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இனி குற்றம் சாட்டப்பட்டவராகச் சீமான் கருதப்பட்டு இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதன் மூலம் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் தரப்பு வாதங்களையும் முன்வைக்க உள்ளார். மேலும், “வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.2025) நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். அவ்வாறு 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.