மூத்த பத்திரிகையாளர் தீக்கதிர்குமரேசன் அவர்கள் ஒன்இந்தியா தமிழ் இணையத்தளத்தில் ஆசிரியர்நக்கீரன் கோபால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்,மேலும்இந்த கைது பற்றி அவர் கூறியிருப்பதாவது,

Advertisment

மத்திய மாநில ஆளுங்கட்சிகள் தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் நக்கீரன் கோபால் கைது நடவடிக்கையை எதிர்த்துள்ளன, தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

kumaresan

ஒரு ஊடகம் தனக்கு கிடைக்கிற, தான் கேள்விப்படுகின்ற தகவல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மக்கள் முன் வைப்பது ஊடக நெறி, ஊடகக் கடமை. அதைத்தான் நக்கீரன் ஏடு செய்திருக்கிறது. அதில் தரப்பட்ட தகவல் சரியா தவறா என்பதை மக்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் தீர்மானிப்பார்கள். வெளிவந்த தகவல் தவறானது என்றால் வழக்குத் தொடரும் சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது. அந்த உரிமையை ஆளுநரும் பயன்படுத்தலாம், எளிய குடிமக்களும் பயன்படுத்தலாம். வழக்குத்தொடரலாம். அதேபோல எதிர்வழக்காடவும் உரிமை இருக்கிறது.

Advertisment

இதனை நீதிமன்றம்தான் விசாரித்து தீர்ப்பளிக்க முடியும். அந்தத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் இயல்பான, சட்டப்பூர்வமான ஜனநாயக நடவடிக்கை. அப்படி இல்லாமல், ஒரு செய்திக்காகக் கைது செய்வது, நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பே தண்டனையளிக்கிற செயல்தான்.

நக்கீரன் போன்ற மக்களிடையே பரவலாக அறிமுகமான, பல்வேறு உண்மைகளை மக்களுக்குக் கொண்டு சென்ற ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியரைக் கைது செய்திருப்பது அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையே. ஊடகங்களில் செயல்படுகிற மற்றவர்களைப் பார்த்து உன் பேனாவை மூடி வைத்துக் கொள், உன் கேமராவை நிறுத்தி வைத்துக் கொள் என்று ஆணையிடுவது போன்ற அடக்குமுறை நடவடிக்கையே. ஆட்சியாளர்களுக்கு, ஆளும் தரப்பினருக்குச் சங்கடத்தை தரக்கூடிய விசயத்தை எழுத முற்படுபவர்களைப் பின்வாங்க வைக்கின்ற ஒரு செயலாகத்தான் இது இருக்கிறது.

ஆளுநரும்முதல்வரும் சந்தித்த இரு நாளில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளால் ஊடகங்கள் பின்வாங்கிட மாட்டார்கள். மாறாக, இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதுதான் நாளைய செய்தியாக மாறும். அடக்கி வாசியுங்கள் என்று இதன்மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படி வாய்ப்பூட்டுப் போடப்படுகிறது என்பதையும் ஊடகங்கள் சேர்த்தே வெளியிடும்.