Skip to main content

197 நாடுகளின் கொடிகளுடன் 2,800 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Army soldier walking 2800 km with flags of 197 countries

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன் (வயது 33). இவர் அசாம் ரைஃபிள் பிரிவில் பணியாற்றிவருகிறார். இவர் 197 நாடுகளின் தேசிய கொடியை சைக்கிளில் கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து அயோத்திவரை 2,800 கிலோ மீட்டர் நடை பயணமாக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி புறப்பட்டார்.

 

கரோனா அதிகரித்த காலத்தில் தன் உயிரையும், பணயம் வைத்து கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்ட அனைத்து  நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசுத்துறையினர் என அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த நடைப்பயணத்தை துவங்கியுள்ளார்.

 

Army soldier walking 2800 km with flags of 197 countries

 

இந்நிலையில் நேற்று (19.11.21) காலை 10.30 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களையும் நினைவுகூரும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியும், மனித இனத்தைக் காக்க கோவிட் - 19 தடுப்பூசி அவசியம் மற்றும் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்கிறேன்” என கூறினார்.

 

திருச்சி மாவட்டத்திற்கு வந்த அவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், சிலம்பம்  அரவிந்த், தண்ணீர் அமைப்புச் செயலாளர்  பேராசிரியர் கி. சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா மற்றும் ரெக்கார்டர் ஜெட்லி ஆகியோர் திருச்சி காவேரி பாலம் அருகில் காலை 10.30 மணியவில் வரவேற்று பொன்னாடை அணிவித்து பயணம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பிவைத்தார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.