ARIYALUR STUDENT INCIDENT CM PALANISAMY ANNOUNCED FUND

Advertisment

அரியலூர் அருகே தற்கொலை செய்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூபாய் 7 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தஙகுழி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் மன உளைச்சல் காரணமாக 09/09/2020 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

இந்த சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடை குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு / அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்து கொள்வதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டுமெனவும் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவ செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, தற்கொலை செய்த மாணவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவித்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.