Skip to main content

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்... சைல்டு லைன் கொடுக்கும் புதிய தகவல்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Ariyalur student   case! New information given by Childline!

 

அரியலூர் மாணவியின் தற்கொலை, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக ஏற்கெனவே தொலைபேசியில் புகார் வந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. 

 

கடந்த 19ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம், மாணவி மருத்துவமனையில் இருந்தபோது பேசிய வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த வீடியோ பதிவு கொண்டு பள்ளி விடுதி காப்பாளர் மீது புகார் கூறப்படுகிறது. மேலும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் சித்தி கொடுமை என சைல்டு லைன் எண்ணுக்கு மாணவியிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், விசாரணைக்குச் சென்ற போது சித்தி கொடுமை இல்லை என மாணவி மறுத்ததாகவும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 

இருப்பினும் மாணவி மற்றும் சித்தி இருவருக்கும் சைல்டு லைன் உறுப்பினர் கவுன்சிலிங் கொடுத்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மாணவியிடம் அப்போது விசாரணை நடத்திய திருமானூர் சைல்டு லைன் குழு உறுப்பினர், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

 

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த சீலிடப்பட்ட அறிக்கை ஒப்படைக்கப்படும் என அரியலூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவி பேசியதாக வெளியான வீடியோவின் மற்றொரு பகுதி தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், பள்ளி விடுதிக்காப்பாளரைக் குற்றம்சாட்டுவதாக உள்ளது. அதேசமயம், மத மாற்றம் தொடர்பான எந்தக் கருத்தும் அதில் இடம்பெறவில்லை. இதனால், காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்