Skip to main content

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

ariyalur school student incident case high court madurai bench

 

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. 

 

அரியலூர் பள்ளி மாணவி மதமாற்ற வற்புறுத்தலால் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, "மாணவி பேசிய வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதே தற்போது முக்கியம். எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது, யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வீடியோ பதிவு செய்த முத்துவேல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. உண்மையின் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த நாளிலேயே வெளியிட்டிருக்கலாம்" என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. 

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "செல்போனை ஒப்படைத்தப் பின் வெளியான புதிய வீடியோ விசாரணையைத் திசைத் திருப்பியுள்ளது. மாணவியை மதமாற்றக் கட்டாயப்படுத்தப்படவில்லை என தஞ்சை மாவட்ட காவல்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதால், காவல்துறை விசாரணை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது" என்று வாதிட்டார். 

 

இதனிடையே, மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு அறிக்கையாக சில விவரங்களை தாக்கல் செய்திருப்பதாக இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தூய இருதய அன்னை சபை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், மாணவியை, அவரது சித்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளார். ஆனால், அரசியல் காரணத்திற்காகவே எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்று குறிப்பிட்டார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.