ADVERTISEMENT

சொத்துப் பிரச்சனை... மகனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்த மனைவி!

12:14 AM Jan 06, 2021 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ளது வாத்திகுடிகாடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தவசீலன் (45). இவர் கேரளாவிற்குச் சென்று கூலி வேலை செய்துவருபவர். இவரது மனைவி சுதா (42). இவர்களுக்கு சிவராஜ் (17), சிபிராஜ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற இடத்தில், தவசீலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வருவதாக அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன. அதை உண்மையாக்கும் விதத்தில், சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்த தவசீலன், தன் சொத்துகள் முழுவதையும் விற்றுவிட்டு பணத்துடன் கேரளாவுக்குச் செல்ல முயற்சி செய்துவந்துள்ளார். இது அவரது மனைவி மகன்களுக்குத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் தவசீலன். அப்போது, அவரிடம் 'நமது மகன்கள் பெயரில் சொத்தை எழுதிவைக்க வேண்டும்' என்று, சுதா கணவர் தவசீலனிடம் கேட்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுதாவும் மூத்த மகன் சிவராஜூம் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தவசீலனை தாக்கியதோடு, கத்தியால் அவரை குத்தி உள்ளனர். இதில், தவசீலன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தவசீலன் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு தவசீலன் கொலைக்கு காரணமான அவரது மனைவி சுதா மற்றும் அவரது மூத்த மகன் சிவராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். சொத்துப் பிரச்சனை காரணமாக மகனுடன் மனைவியும் சேர்ந்து கணவரை கொலைசெய்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT