Skip to main content

அரியலூர்: விவசாய சங்கங்கள் போராட்ட அறிவிப்பு! மத்திய அரசுக்குக் கண்டனம்.

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
farmers organisations meeting ariyalur

 

ஜூலை 27இல் தமிழகம் முழுவதும் மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அரியலூரில் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அரியலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கட்டடத்தில் அரியலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு  மாநில தலைவர் வாரணவாசி ராசேந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், காவேரி டெல்டா பாசன விவசாயி  சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க. தர்மராஜன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு காவிரி  டெல்டா பாசன விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் இளங்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க தலைவர் செங்கமுத்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், பொன்னாறு விவசாயிகள் சங்கம் தலைவர் நத்தவெளி ஜெகநாதன், பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார வரைவு திருத்தச்சட்டம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும்.

 

  • மேலும் ‘அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020’, ‘வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020’, ‘விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் & வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020’ ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

 

  • இதனை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜூலை 27 அனைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தின் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்திலும் அப்போரட்டம் நடத்தப்படும்.

 

  • அரியலூரில் ஜூலை 20இல் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் சார்பில் 2 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கப்படும்.

 

  • கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் வழங்குவதில்லை என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.