சென்னை எண்ணூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கோழி செல்வம். இவர் அவருடைய நண்பரான மனோஜ் என்பவருடன் சேர்ந்து கொண்டு திருவொற்றியூர் டோல்கேட் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். இருவரும் தலைநிற்காத அளவிற்கு மது அருந்திய பின்னரும் கோழி செல்வம் மது வேண்டும் மது வாங்க காசு கொடு என மனோஜிடம் கேட்டுள்ளார். ஆனால் மனோஜ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோழி செல்வம் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜை தாக்க ரத்த வெள்ளத்தில் மனோஜ் சுருண்டு விழுந்தார்.
அப்பொழுது அதே கடையில் மது அருந்திக் கொண்டிருந்த திருவேங்கடம் என்ற முதியவர் கோழி செல்வத்தை தட்டிக் கேட்டுள்ளார். அப்பொழுது அவரையும் கோழி செல்வம் கத்தியால் தாக்கினார். அவரும் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார். இதனால் அந்த டாஸ்மாக் கடையிலிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர். உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோழி செல்வத்தை கைது செய்தனர். பின்னர் காயமுற்ற மனோஜ், திருவேங்கடம் என இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மது வாங்க பணம் கேட்டு நடந்த தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.