இந்த நிகழ்விற்காக ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ வெற்றி திரையரங்கிற்கு வந்தார். அதை தொடர்ந்து, தேனி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவணத் திரைப்படத்தை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். அப்போது ம.தி.மு.க. முன்னாள் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சிவா என்பவர், ஆவணப்படம் காண்பதற்கான டிக்கெட் வழங்கவில்லை என்று மாவட்ட பொறுப்பாளர் இராமகிருஷ்ணனிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தியும் வாக்குவாதம் முற்றியதால் திரையரங்கிற்கு உள்ளே சென்ற துரை வைகோ, வாக்குவாதம் நடைபெற்ற கார் பார்க்கிங் இடத்திற்கே வந்து இருவரையும் சமரசம் செய்து வைத்துச் சென்றார்.
இருப்பினும் திரையரங்கிற்கு உள்ளே செல்லும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக திரையரங்க வளாகத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.