Skip to main content

“மணல் உன் அப்பன் வீட்டு சொத்தா? முடிஞ்சத பார்த்துக்கோ” - முன்னாள் அதிமுக அமைச்சரிடம் வாக்குவாதம்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மணல் திருட்டு நடப்பதும், அதை  வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பந்தப்பாறை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வாகனங்களில் மணல் கடத்துவது தொடர்ந்து நடக்கிறது. அதனால் 24 மணி நேரமும் நடக்கின்ற மணல் கொள்ளையை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.  

 

வழக்கம்போல ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்துவது நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அங்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுக மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை உள்ளிட்டோர் விதிமீறலான மணல் கடத்தலைத் தடுக்க முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் “இதை வீடியோ எடுப்பா..” என்று கூற, மணல் கடத்தியவர்களோ, “இது உன் அப்பன் வீட்டு சொத்தா?” என்று எகிற, அந்த இடம் ரசாபாசமானது. “அப்படித்தான் மணல் அள்ளுவோம். உன்னால  முடிஞ்சத பார்த்துக்கோ..” என்று சத்தம் போட்ட மணல் கடத்தல் ஆசாமி ஒருவர், பெருமாள் பிச்சையை முதுகில் அடித்து அங்கிருந்து நெட்டித்தள்ள, “என் கூட வந்த ஆள் மேல கை வைக்காத..” என்று இன்பத்தமிழன் எச்சரிக்க, தொடர்ந்து அமளிதுமளியானது. 

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஒருகட்டத்தில் வழியில் சேர் போட்டு அமர்ந்து டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்றி விடுவார்களோ என்ற பரபரப்பு நிலவியது. அதனால், “சரி.. சரி.. கோர்ட்ல பார்த்துக்குவோம்..” என்று சவால் விட்டு அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை அதிமுகவினருக்கு ஏற்பட்டது. லோக்கல் ஆளும் கட்சியினரோ, “தடுக்கப் போன அதிமுகவினர் கனிமவளச் சுரண்டலுக்கு எதிரானவர்களா? நாட்டு நலனில் அக்கறை கொண்ட  நல்லவர்களா? எதிர்ப்பு என்ற பெயரில் ஸ்டண்ட் அடித்து ஏதாவது தேறாதா? மாமூல் கிடைக்காதா? என்ற சுயநலத்தோடு போனார்கள். அதனால்தான் அதிமுகவினரின் உள்நோக்கத்தை அறிந்த மணல் கடத்தல் ஆசாமிகள், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.” என்று விமர்சனம் செய்கிறார்கள்.

 

உயர்நீதிமன்றம் பல தடவை எச்சரித்து உத்தரவிட்டும் தமிழகத்தில் விதிமீறலாக மணல் கடத்துவது பல மாவட்டங்களிலும் தொடர்ந்து  நடக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.