தந்தை - மகன் இடையே வாக்குவாதம்; பாமகவுக்குள் வெடித்த அதிகார மோதல்

Argument between Ramadoss and Anbumani in PMK

பாமக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சியின் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளையும்ராமதாஸ் வழங்கினார்.

இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், பாமக கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால், ராமதாஸ் அந்த அறிவிப்பை அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த அன்புமணி குறுக்கிட்டு முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு? என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள்” என்று கோவமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி,“எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார்.

முகுந்தன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனும், அன்புமணியின் மருமகனும் என்பது குறிப்பிடத்தக்கது.

anbumani pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe