Skip to main content

'நான் அழகா இல்லையா..' கணவனை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய மனைவி

Published on 14/06/2025 | Edited on 14/06/2025
'Aren't I beautiful?' Wife pours petrol on husband and sets him on fire

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்த கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நேருபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயத் தொழிலாளியான ரங்கசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த  திங்கட்கிழமை அன்று இரவு 11 மணியளவில் ரங்கசாமி தூங்கிக் கொண்டிருந்த அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக ரங்கசாமியின் மகன் மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ரங்கசாமி உறங்கிக் கொண்டிருந்த மாடி அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்பொழுது உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் ரங்கசாமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். ரங்கசாமியை மீட்ட அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ரங்கசாமி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சம்பவத்தன்று அவருடைய மனைவி கவிதா காணாமல் போனார். இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதால் காவிரிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கவிதாவை தேடி வந்தனர்.

கவிதாவின் மொபைல் சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பதியில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து திருப்பதி சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த கவிதாவை கைது செய்து அழைத்து வந்தனர். ரங்கசாமியின் உயிரிழப்பு குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'கடந்த 22 ஆண்டுகளாக ஒன்றாக ரங்கசாமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கணவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரோடு முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறிய கவிதா, இது தொடர்பாக பலமுறை எச்சரித்தும் கணவர் அந்த உறவை முறித்து கொள்ளவில்லை' என தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டிலிருந்த பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவிற்கு கணவர் ரங்கசாமி கொடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கவிதா கணவர் ரங்கசாமியிடம் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 'நீ அழகா இல்ல அசிங்கமா இருக்கிற..' என கவிதாவை கணவர் ரங்கசாமி திட்டியதால் ஆத்திரமடைந்த கவிதா, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது போர்வையை விரித்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கவிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்