Skip to main content

கடலோர  மக்களுக்கு விதிகளை தளர்த்தி மனைப்பட்டா; எம்எல்ஏ மா.கோவிந்தராசு கோரிக்கை!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சம்பைபட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் பலதலைமுறைகளாக குடியிருந்து வரும் சிறுபான்மை இன மீனவ மக்களுக்கு விதிகளை தளர்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சரை புதன்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

 

 Are the rules relaxed for coastal people? MLA Govindarasu's demand!

 


பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, புதன்கிழமை அன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, தொகுதி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் மீனவக் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தவாறு, மல்லிப்பட்டினத்தில்  கட்டப்பட்டது போன்ற நவீன மீன்பிடித்துறைமுகத்தை கட்டித் தரவேண்டும். அதில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்.

மேலும் சின்னமனை, பிள்ளையார்திடல், திருவத்தேவன், சேதுபாவாசத்திரம் மற்றும் தேவையான இடங்களில், நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், கடலில் ஆறு சென்று கலக்கும் வாய்க்கால்களில் உள்ள சேறு, சக்திகளை அகற்றி தூர் வாரி, ஆழப்படுத்தி தரவேண்டும்.

இதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் உள்ள 7 படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சம்பைபட்டினம் கிராமத்தில் பல தலைமுறைகளாக கடலோரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், விதிமுறைகளை தளர்த்தி, கருணை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.