Skip to main content

முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்களே? ஸ்டாலின் பேட்டி

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
police


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் , உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசையும், மத்திய அரசுக்கு அடிபணிந்து கபட நாடகம் நடத்தி வரும் ‘குதிரை பேர’ அதிமுக அரசையும் கண்டித்து, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் இன்று (05-04-2018) சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், காவல்துறையினரின் தடுப்பை மீறி வாலாஜா சாலையில், கையில் கறுப்பு கொடியேந்தி பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள உழவர் உழைப்பாளர் சிலை அருகில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து,  மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பெரம்பூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 

ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை தந்த பிறகும், மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு காலம் கடத்தி வருகிறது. அதற்கு ஜால்ரா போடக்கூடிய, அடிமையாக இருக்கக்கூடிய அரசாக தமிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

அதன்படி, தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவெடுத்து, இதுவரையில் தமிழகத்தில் இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம் நடந்திருக்குமா என்று கேட்கும் வகையில், இன்றைக்கு மிகப்பெரிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று, நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் தோழர்கள், வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லா அமைப்புகளுக்கும், அனைத்து கட்சிகளின் சார்பில் எனது நன்றியை மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று, இதுவரை எங்களுக்கு வந்திருக்கின்ற கணக்கின்படி, ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஆங்காங்கு இருக்கின்ற மண்டபங்களில், பொது இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இன்று மாலை நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து கட்சி கூட்டம், மாற்றப்பட்டு, நாளை காலை பத்தறை மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தின்படி, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில், டெல்டா பகுதியான திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கி, கடலூரில் முடிவடையும் வகையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், எந்தெந்த தலைவர்கள், எங்கெங்கு பங்கேற்பது, சிறப்பான வகையில் நடத்துவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

 

செய்தியாளர்: முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கிறார்களே?

ஸ்டாலின்: பொதுமக்களுக்கு எந்தவிதமாக சிரமும் ஏற்படாது. காரணம், இது அவர்களின் உணவு பிரச்சினைக்கான போராட்டம். தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் நடைபெற்று உணவு, குடிநீர் பிரச்சினைகள் தீர முடியும் என்பதால் பொதுமக்களே முன்வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இது கட்சி சார்பான போராட்டமல்ல. எங்களுடைய போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் ஆதரவளித்து, எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருக்கிறது. ஆனால், ஒரு சிலர், குறிப்பாக சில ஊடகங்கள் ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது போல வேண்டுமென்றே ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. இந்தப் போராட்டம் அமைதியாக, அறவழியில் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

 

செய்தியாளர்: இதன் பிறகாவது மத்திய அரசு தமிழகத்தின் குரலுக்கு செவி சாய்க்குமா?

ஸ்டாலின்: இதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாங்கள் அனைவரும் பேசி முடிவெடுப்போம்.

 

செய்தியாளர்: காவிரி விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று சொல்லி தமிழக அரசு மவுனமாக இருக்கிறதே?

ஸ்டாலின்: தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேர அரசும் எதுவும் செய்யப்போவதில்லை. மத்திய பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அதனால் தான் மீண்டும் சொல்கிறோம், இதே மத்திய அரசு Clarification கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. உடனடியாக மத்திய அரசு அந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, வரும் 9 ஆம் தேதியன்று மாநில அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தியே நாங்கள் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

 

செய்தியாளர்: தமிழக நிலவரம் குறித்து ஆளுநர் திருப்தி தெரிவித்து இருப்பதாக முதல்வர் தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்:  ஆளுநர்  ஒருவார காலத்துக்கு முன்பாக என்னை அழைத்து, இந்த ஆட்சியில் நடக்கும் அலங்கோலங்களை எல்லாம் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியின் மீது ஆளுநர்  என்ன Opinion வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், ஆளுநர் தனி வழியில் (Track) சென்று, ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது. ஏற்கனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உண்ணாவிரதம் என்ற பெயரில் கபட நாடகம் நடத்தியதுபோல, இப்போது ஆளுநர் அவர்களை சந்தித்துவிட்டு வந்து, மீண்டும் ஒரு நாடகம் நடத்துகிறார்கள்.

 

செய்தியாளர்: பிரதமர் தமிழகம் வரும்போது கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவீர்களா?

ஸ்டாலின்: ஏற்கனவே, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்த எல்லா தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே, நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதை எந்தவிதத்தில் செயல்படுத்துவது என விவாதித்து முடிவெடுப்போம்.

 

செய்தியாளர்: வரும் 9 ஆம் தேதி தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றத்தில் கிடைக்குமா?

ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பை வழங்கிவிட்டது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. அதை அமைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தரும் யோக்கியதையும், அருகதையும் மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் நடக்கும் குதிரை பேர ஆட்சிக்கு இல்லை.

 

செய்தியாளர்: சில கட்சிகள் தனிப்பட்ட முறையில் போராடுகிறார்களே?

ஸ்டாலின்: அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவரவர் பாணியில் போராடுகிறார்கள். எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். ஏற்கனவே, இந்த அரசு வேறு வழியில்லாமல், நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தி இருந்தால், இப்போது நாங்கள் போராடும் அவசியம் ஏற்பட்டிருக்காது. அந்தத் தீர்மானங்களின்படி அரசு செயல்பட்டு, முடிவுகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதனால், எதிர் கட்சிகளான நாங்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எடப்பாடி தலைமையிலான குதிரை பேர அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும்வரை எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுவது நடக்காது. அவர்கள் எப்போது துணிச்சலாக வெளியில் வந்து, பதவி குறித்தும் ஆட்சி பற்றியும் கவலைப்படாமல் மத்திய அரசை கேள்வி கேட்கும் ஆற்றல் வந்தால், நீங்கள் கேட்டபடி எல்லா கட்சிகளும் இணைந்து போராடும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !