மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து புதிய அறிவிப்பை மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பாணையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், பராகிரித் உள்ளிட்ட 10 மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய அறிவிப்பாணைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழைச் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், "மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கவோ, அதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கவோ வேண்டாம். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே. தொல்லியல்துறை பட்டயப்படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கண்டனத்தை வெளிப்படுத்தியதையடுத்து தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்ததற்கு வரவேற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.