Skip to main content

அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவு...ஆதங்கத்தில் விவசாயிகள்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Arbitrary decision of the authorities...! - Farmers in panic!

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 26ஆம் தேதி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார்கள். அப்போது கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் தலைவர் காசியண்ணன் தலைமையில் வந்த விவசாயிகள் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர் கூறும்போது, தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அது இன்று 25 ந் தேதி முதல் முறை வைத்து நீர் வழங்க முடிசெய்யப் பட்டுள்ளதாக அறிகிறோம். பாசன விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையிலும் மேல் பகுதியிலேயே நெல் நடவு வேலைகள் முடிவு பெறாத நிலையிலும் முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். இதை கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சார்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக முறை வைத்து நீர் வழங்குவதை அமல் படுத்தாமல் எல்லா மதகுகளுக்கும் உரிய நீரை முழுமையாக வழங்கி விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றனர்.

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் பட்டின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக் கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பியவாறு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், கோஷம் போடாமல் உங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியரிடம் கொடுங்கள் என்றனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர். 

 

இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்குகோம்பை, அரசூர், தட்டாம்புதூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், அருணாச்சலம் உள்பட 12 பேர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது; “அரசூர் ராஜவீதியில் குடியிருக்கும் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் நாங்கள் பல தவணைகளாக 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நபர் எலச்சீட்டு பணத்தை எங்களுக்கு தராமல் காலம் தழ்த்தி வருகிறார். இதற்காக நாங்கள் கடன் வாங்கி அவரிடம் பணத்தை கொடுத்தோம். அவர் கூறியபடி பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.