கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடி மையங்களின் முன்பு வாக்காளர்கள் வரிசையில் நிற்க வசதியாக பந்தல் அமைப்பதுடன் அவர்களுக்கு குடிதண்ணீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தான் அறந்தாங்கி அருகில் உள்ள குரங்களூர் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு நீண்ட தூரம் வெயிலில் நடந்து வந்து காத்திருந்து ஓட்டுப் போட ஆவணங்களை காட்டிவிட்டு விரலில் மை வைப்பதற்காக காத்திருந்த மல்லிகா (60) என்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். தூக்கிப்பார்த்தனர். அவர் இறந்திருந்தார். உறவினர்கள் உடனே மல்லிகாவின் உடலை அவரது வீட்டிற்கு தூக்கிச் சென்றனர்.
இதே போல வடகாடு பரமன்பட்டி வாக்குச்சாவடி, போன்ற ஏராளமான வாக்குச்சாவடிகளில் பந்தல் இல்லை. பந்தலுக்காக தேர்தல் ஆணையம் ஒதுக்கி கிராமநிர்வாக அலுவலர்களிடம் கொடுத்த பணம் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு பக்கம் இயந்திரக் கோளாறுகள் இன்னொரு பக்கம் வாக்காளர்களுக்கு வசதிகள் இல்லை என்பதால் ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கே செல்லவில்லை.