Arani River floods; Alert for 60 villages

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகப்படியான நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியில் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 6,000 கன அடி நீர் என நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆரணி ஆற்றில் 5,600 கன அடி நீர் திறப்பு இருந்த நிலையில் தற்போது 6,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றின் வழித்தடங்களான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலவாக்கம், மாம்பாக்கம், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட 60 கிராமங்களுக்கு இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.