Skip to main content

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்; விண்ணப்பிக்க ஜன.30ம் தேதி கடைசி

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

Appointment of nurses on contractual basis; Apply Jan. 30th is the last date

 

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில், கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது, அரசு மருத்துவமனைகளில் 3200 செவிலியர்களை தற்காலிகமாக, தொகுப்பு ஊதிய அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு நியமித்தது. அவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிச. 30, 2022ம் தேதியுடன், கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தது தமிழக அரசு. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தற்காலிக செவிலியர்களுக்கு அரசின் திடீர் நடவடிக்கை பேரிடியாக இறங்கியது.

 

இது ஒருபுறம் இருக்க, இனசுழற்சி விதிகளை பின்பற்றவில்லை என்று கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களில் 800 பேர், ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, எஞ்சியுள்ள 2472 கரோனா கால தற்காலிக செவிலியர்கள் தங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கக் கோரியும், காலியிடங்களைப் பொருத்து படிப்படியாக பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஜன. 1ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

 

இதுதொடர்பாக அவர்களுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுத்தரப்பில், அந்தந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மீண்டும் தற்காலிகமாக செவிலியர்களை அந்தந்த ஊர்களிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், முன்பை விட கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை.

 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட நலவாழ்வு சங்கங்கள் தற்காலிக செவிலியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக பணியாற்ற செவிலியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) வெளியிட்டுள்ளது. அதன்படி, 218 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செவிலியர் பட்டய படிப்பு / பி.எஸ்சி., நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https://Salem.nic.in) வலைத்தளத்தில் (career section) பிரிவில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய ஆவண நகல்களுடன், ''செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய நாட்டாண்மைக் கழக கட்டட வளாகம், சேலம் மாவட்டம் - 636001'' என்ற முகவரிக்கு ஜன. 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தின் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது, சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தை நேரில் அணுகியும் அறிந்து கொள்ளலாம். இத்தகவலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனல் பறக்கும் தேர்தல் களம்; தி.மு.க.வில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Important announcements in DMK for lok sabha election

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

Important announcements in DMK for lok sabha election

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நாளை (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். அதற்கு மறுநாளான 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். 

Next Story

முதல்வரின் உத்தரவு; ஒரு மணி நேரத்தில் ஓடோடி வந்த அதிகாரிகள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai's manai patta was searched for in an hour

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஒரு சென்ட் மனைக்கான  கூடுதல் பட்டா அவரைத் தேடிச்சென்று அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.