பணியின் போது பலியான 22 வயது வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.2.93 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அந்த வாலிபர் பணியாற்றிய தனியார் நிறுவனத்துக்கு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘பலியான வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த இழப்பீடு தொகையை மனுதாரர் நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை. இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் தனியார் நிறுவனங்களோ, இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மேல் முறையீடு செய்யக்கூடாது. எனவே, தொழிலாளர் துணை ஆணையரின் உத்தரவின்படி இழப்பீடு தொகையை 3 மாதத்திற்குள், விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் மனுதாரர் நிறுவனம்‘டெபாசிட்’ செய்ய வேண்டும்.
இதுபோன்ற மேல்முறையீட்டு வழக்கை ஏற்பதற்கு முன்பு, இழப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா? என உயர் நீதிமன்ற பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல் முறையீடு வழக்குகளை, நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீடு ஆணையங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.