ADVERTISEMENT

" போயஸ் இல்ல மேல்முறையீட்டு மனு தள்ளுபடி... அரசியல் காரணத்திற்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது.." - உயர்நீதிமன்றம் அதிரடி!

11:07 AM Jan 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேதா இல்லம் தொடர்பான அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இலலத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார்.

அதில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்கச் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது" ஆணை பிறப்பிக்கப்பட்டு இல்லம் தீபா வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்று அன்று ஜெ.வின் வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி. சண்முகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில், " மேல்முறையீடு செய்ய தற்போதைய அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை என்ற முறையில் அனுமதி கேட்கப்பட்டது. வேதா நிலையத்தை வாரிசுகளிடம் ஒப்படைத்தால் கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் நினைவு இல்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்ற தனி நீதிபதியின் கருத்து தேவையற்றது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திக்குமார் சுகுமாரா க்ரூப் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். ''ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்.பொதுநோக்கம் இன்றி அரசியல் காரணத்திற்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது'' என தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT