Skip to main content

இனிமேதான் கிடுக்கிப்பிடி விசாரணை இருக்கு!! தங்கமணி வீடுகளில் ரெய்டு குறித்து ர.ர.க்கள் மத்தியில் பேச்சு! 

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

Anti Corruption raid in Thangamani house and his son house
தரணிதரன் வீடு

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன். இவருக்குச் சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் சொகுசு பங்களா உள்ளது. இவருடைய வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் இருக்கிறது. தரணிதரன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், புதன்கிழமை (டிச. 15) சோதனை நடத்தினர். 

 

காலை 6.30 மணியளவில் தொடங்கிய சோதனை, மாலை 6 மணிக்கு முடிந்தது. அவருடைய வீட்டில் இருந்து போலீசார் ஒரு சிறிய கைப்பையை மட்டும் எடுத்துச் சென்றனர். அதில் சில ஆவணங்களும், ஒரு செல்போனும், ஒரு சிறிய டைரியும் எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தரணிதரன் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள அஷ்வா பார்க் நட்சத்திர விடுதியிலும் சோதனை நடந்தது. குழந்தைவேலு என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியில், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

 

மேலும், சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள குழந்தைவேலுவின் வீடு, மறவனேரியில் உள்ள தரணிதரனின் ஆடிட்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பெரிய அளவில் பணமோ, நகைகளோ சிக்கவில்லை.

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''சேலம், நாமக்கல், ஈரோடு வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்களில் 40 சதவீதம் தங்கமணியின் பினாமியின் பெயர்களில்தான் இயங்குகின்றன. உதாரணமாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருக கடவுள், கிருஷ்ணர் கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து பஸ்களையும் தங்கமணிதான் பினாமிகள் மூலம் வாங்கியிருப்பதாக அதிமுக கட்சிக்குள்ளேயே பலமான பேச்சு உண்டு. 

 

th

 

இதில் கிருஷ்ணர் கடவுள் பெயரிலான நிறுவனத்திடம் இருந்து 7 பஸ்களை தலா 7 கோடி ரூபாய்க்கு வழித்தட உரிமையுடன் தங்கமணி தரப்பில் வாங்கியுள்ளனர். முருக கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து 4 பஸ்களை, வழித்தட உரிமையுடன் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்களை தலா 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்விரு நிறுவன உரிமையாளர்களுக்கும் நிறைய அழுத்தம் கொடுத்தே வாங்கியுள்ளனர். ஆனால், சந்தேகத்திற்குரிய பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒரு இடத்தில் கூட போலீசார் சோதனை நடத்தாதது வியப்பாக இருக்கிறது.

 

கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், பிரதான இடத்தில் உள்ள சொத்துகளை குறி வைத்துவிட்டால் அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவார்கள். அவ்வாறு எக்கச்சக்கமான சொத்துகளை சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்து, பினாமி பெயர்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

எதிர்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் வரலாம் என்பதால், யாரிடம் இருந்து சொத்துகளை வாங்குகிறார்களோ அந்த சொத்துகளை அதே உரிமையாளர்களின் பெயர்களிலேயே தொடரச் செய்து வருகின்றனர். அதனால்தான் இப்போது நடந்த சோதனைகளின்போது கூட பெரிய அளவில் பணமோ, நகைகளோ, ஆவணங்களோ சிக்கவில்லை” என்கிறார்கள் அதிமுக புள்ளிகள். 

 

இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கேட்டபோது, ''வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆர். பதிவு செய்வதும், அதன்பேரில் புகாருக்கு ஆளானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதும் சட்டப்பூர்வமான சம்பிரதாய நடவடிக்கைகள்தான். இதன் பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடைய பினாமிகளாக சந்தேகப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவோம்.

 

விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் பல புதிய இடங்களில் சோதனைகள் தொடரலாம். புதிதாக சிலர் மீது வழக்குகளும் பாயக்கூடும். இப்போது நடந்த சோதனையை வைத்து எதையும் இறுதி செய்துவிட முடியாது. இதெல்லாமே ஆரம்பம்தான். இனிமேல்தான் கிடுக்கிப்பிடி விசாரணையே இருக்கிறது. 

 

கடந்த 2017க்குப் பிறகு பத்திரப்பதிவுத்துறையில் நடந்த அதிக மதிப்பிலான கிரைய ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. தங்கமணியின் பினாமிகள் ஆந்திராவில் நிறைய இடங்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தப்படும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.