Skip to main content

ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை! சொத்து ஆவணங்கள் சிக்கின!!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Anti-corruption police raid the home of the Assistant Director of Panchayats

 

 

வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன் உதவி இயக்குநர் பிடிபட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து முக்கியமான சில சொத்து ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். 

 

கடந்த 6ஆம் தேதி மாலை, அவருடைய அலுவலகத்திற்குள் திடீரென்று நுழைந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், செந்தில்வேலனை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தீபாவளி வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையின்போது, அவரிடம் இருந்து கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் உள்ள அவருடைய வீட்டில் நவ. 7ம் தேதி லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த செந்தில்வேலனின் மனைவி, மாமியார், மகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். நள்ளிரவு 1 மணி வரையிலும் சோதனை நடந்தது. அந்த வீட்டில் இருந்து சில சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 

 

செந்தில்வேலன், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய மகளுக்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். அப்போதே அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படலாம் என்ற தகவல்கள் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்