Anti-corruption police raid the home of the Assistant Director of Panchayats

Advertisment

வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன் உதவி இயக்குநர் பிடிபட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து முக்கியமான சில சொத்து ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 6ஆம் தேதி மாலை, அவருடைய அலுவலகத்திற்குள் திடீரென்று நுழைந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், செந்தில்வேலனை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தீபாவளி வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையின்போது, அவரிடம் இருந்து கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் உள்ள அவருடைய வீட்டில் நவ. 7ம் தேதி லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த செந்தில்வேலனின் மனைவி, மாமியார், மகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். நள்ளிரவு 1 மணி வரையிலும் சோதனை நடந்தது. அந்த வீட்டில் இருந்து சில சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

செந்தில்வேலன், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய மகளுக்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். அப்போதே அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படலாம் என்ற தகவல்கள் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.