Skip to main content

ஈரோடு பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் ரெய்டு...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Anti-Corruption Department raids Erode Public Works Department official's office ...!

 

 

தொழிற்சாலைகளில் நிறுவப்படும் பாய்லர் எனப்படும் கொதிகலன்களுக்கு பொதுப்பணித்துறை கொதிகலன் பிரிவில் அனுமதி பெறப்பட வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கொதிகலன் உறுதித்தன்மை குறித்து அந்தப் பிரிவு சான்று வழங்க வேண்டும். 

 

அவ்வாறு அனுமதி வழங்குவதற்கும் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறையினர் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளது. இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நான்கு  அரிசி ஆலைகளில் கள ஆய்வு செய்துள்ளனர். 

 

அப்போது அவர்கள் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டி.எஸ்.பி திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரேகா மற்றும் போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மூன்றாம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.  அந்த சோதனையில் ரூபாய் 1.61 லட்சம் பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் அவருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவர் மீதும்  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு சங்கு நகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் வீட்டில் 15ஆம் தேதி இரவு டி.எஸ்.பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரொக்கமாக ரூபாய் 66 ஆயிரமும் மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

முதல்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும்  கைப்பற்றப்பட்டுள்ள மற்ற சொத்து ஆவணங்களின் மதிப்பு குறித்து போலீசார் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியன் சொந்த மாவட்டம் தேனி என்பதால் அங்கு உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை முடிவில்தான் எவ்வளவு ரூபாய், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.