Skip to main content

எட்டு மணி நேர சோதனை... சிக்கிய லட்சங்கள்... விசாரணை வளையத்தில் திட்ட மேலாளர்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Anti corruption department raid  Project Manager in the Inquiry

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தினுள் உள்ள, ஒன்றிய வட்டார சேவை மையத்தில் மகளிர் வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடம், வருவாய்த்துறை ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  சுமார் எட்டு மணி நேரமாக நடைபெற்ற சோதனை இரவு 12 மணியளவில் முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். 

 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் ஏழைகள் மற்றும் மகளிரை கொண்டு குழுக்கள் அமைத்தல், தொழில் குழுவை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 ஊராட்சிகளிலும் கணக்கீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Anti corruption department raid  Project Manager in the Inquiry

 

அவ்வாறு பணிபுரியும் கணக்கீட்டாளர்களுக்கு மாதம் 2000 ரூபாய் என இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 48,000 ரூபாய் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு சமீபத்தில் அனைத்து கணக்கிட்டாளர்களுக்கும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டார சேவை மைய அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய உதவி திட்ட அலுவலர் சித்ரா மற்றும் மேலாளர் கலைச்செல்வி ஆகிய இருவரும் கிராமப்புற கணக்கீட்டாளர்களை மிரட்டி சம்பளம் வாங்கிய பணத்தை கொண்டு வர வேண்டுமென கூறியுள்ளனர். அவ்வாறு சம்பளப் பணத்தை கொண்டு வந்த கணக்கீட்டாளர்களிடம், பணத்தை வாங்கிக் கொண்டு, சொர்ப்ப பணத்தை மட்டுமே சம்பளமாக கொடுப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் இயங்கக்கூடிய மகளிர் திட்ட அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 3 லட்சத்தி 16 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும்" என்றனர். 

 

Anti corruption department raid  Project Manager in the Inquiry

 

மேலும் லஞ்சம் பெற்றதாக உதவி திட்ட அலுவலர் சித்ரா, மேலாளர் கலைச்செல்வி ஆகியோர் மீது விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானால் வருவாய் துறையினர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர். விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு வரை எட்டு மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்  துறை சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.