
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்தது. பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.
29 இடங்களில் அதி கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 128 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த மூன்று மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். நாளை (14/11/2024) தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை இன்று குமரிக் கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 15, 16, 17 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 15, 16, 17 ஆகிய மூன்று தேதிகளிலும் அந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது'' என்றார்.