Skip to main content

அரசால் மூடப்பட்ட மற்றொரு அரசுப் பள்ளி;போராடி திறந்த பொதுமக்கள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக கூறி 46 அரசுப்பள்ளிகளை மூடி அதில் நூலகம் திறக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ள சின்னபட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் மூடப்பட்டு நூலகம் தொடங்கும் பணி நடந்துவந்தது.

இந்நிலையில் கடந்த 9 ந் தேதி குளத்தூர் மக்களை சந்தித்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கிராம மக்களிடம் நீண்ட நேரம் நாம் பத்திரிகை நண்பர்கள் பேசியதால் உடனடியாக கிராம கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி 13 ந் தேதி 11 குழந்தைகளுடன் மூடிய பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அன்றே மற்றொரு பள்ளியான சின்னபட்டமங்களம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி பெண்கள் மற்று கிராம தலைவர் உள்ளிட்ட பொதுமக்களிடம் அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய நிலையில் ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை, மாணவர்களை சேர்க்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

தொடர்ந்து அந்த குறைகளை அதிகாரிகள் சரி செய்வார்கள் என்று நம்பிக்கையாக பேசியதால் உடனடியாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வட்டார கல்வி அலுவலருக்கு கொடுத்தனர். இந்தநிலையில் இன்று 10 குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பள்ளி உள்ளூர் ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடத்த தொடங்கினார்கள். இந்த தகவல் அறிந்து வந்த ஆவுடையார்கோயில் வட்டார கல்வி அலுவலர் லதா பேபி பெற்றோர்களிடம் மாணவர்களின் வயதை கேட்டறிந்த பிறகு மீண்டும பள்ளி தொடர்ந்து இயக்கப்படும் என்று சொன்னதுடன் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் இளையபெருமாளை தற்காலிக ஆசிரியராக நியமித்து வகுப்புகளை நடத்த உத்தரவிட்டார். 

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் மூடப்பட்ட பள்ளிகள் இல்லை என்ற நிலை உருவானது. இந்தநிலையில் சின்னப்பட்டமங்களம் பள்ளிக்கு சரியாக வராமல் பள்ளியை மூட காரணமாக இருந்த ஆசிரியரை கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இதேபோல மற்ற 44 பள்ளிகளையும் திறக்க உள்ளூர் இளைஞர்களும் கிராம மக்களும் முயன்றால் மூடிய பள்ளிகளை மீண்டும் திறக்கலாம்.

பத்திரிகை நண்பர்களின் தொடர் முயற்சியால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.