ட்

ஓசூரில் நடந்துள்ள ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் 20.11.2018 காலை 10 மணிக்கு தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

இது குறித்து அவர் மேலும் தனத அறிக்கையில், ‘’ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இதனிடையே நந்தீஸ் -சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலிஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும்வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக் கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்துவரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டிவரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

Advertisment

2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக் கொலைகளை தேதிவாரியாகப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.

27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.

ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின்பற்றவில்லை. அது இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக்

கேட்டுக்கொள்கிறோம்.