Advertisment

அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு; அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் கைது!

Annanagar girl case ADMK executive, female police inspector arrested

Advertisment

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதோடு சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இந்த வழக்கை, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றம் செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், பெண் காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறுமியின் உறவினர், சதீஷ் ஆகியோருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

admk arrested
இதையும் படியுங்கள்
Subscribe