தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண்; என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது, விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து, கையில் கருப்பு பட்டை அணிந்து நடந்து சென்று மக்களைச் சந்தித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் - திருச்சுழி – காரியாபட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (9 ஆம் தேதி) நடைப்பயணத்தைத் தொடங்கினார். விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவியிருந்த பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் அகற்றியதைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து, நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் பனை ஓலை மூலம் கூடை பின்னி வரும் தொழிலாளர்களைச் சந்தித்த அவர், அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பிறகு, ஆதிதிராவிடர் காலனியில் பராமரிக்கப்படாமல் இருந்த வீடுகளைப் பார்வையிட்டார். பாரம்பரிய நாதஸ்வர இசைக் கலைஞர்களைச் சந்தித்தபோது, கலைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். காரியாபட்டி வீதிகள் வழியாக அண்ணாமலை நடந்து சென்றபோது, பொதுமக்கள் வரவேற்பளித்தனர். பேருந்து நிலையம் அருகே திறந்த வாகனத்தில் பேசியபோது, “மிகவும் பின்தங்கிய பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு மத்திய அரசு பல நல்லத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதனால், இப்பகுதி படிப்படியாக முன்னேறி வருகிறது.” என்றார்.