publive-image

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்று பேராசிரியர், துறைத் தலைவர், வேளாண்புல முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்து தற்போது அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பல்கலைக்கழகத்தின் வேளாண் புலத்தில் உள்ள வேளாண் கழகம் சார்பில்பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisment

இதற்கு வேளாண்துறை புல முதல்வர் சுந்தர வரதராஜன் தலைமை தாங்கினார். வேளாண் கழகத் துணைத் தலைவர் இமயவரம்பன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் துணைவேந்தரை வேளான் கழகத்தின் சார்பில் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலகலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூர கல்வி இயக்குனர் சிங்காரவேல், வேளாண் துறையின் தலைவர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் வேளாண் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து விழா ஏற்புறையாற்றிய துணைவேந்தர் கதிரேசன், “வேளாண் மாணவர்கள் தங்களின் முன்னோர்களின் பாதையில் மதிப்பீடுகளை கொண்டு செயல்பட வேண்டும். வேளாண் புலத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அரங்குகளுக்கு வேளாண் புலத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய முன்னாள் பேராசிரியர் பெயர்களை வைக்க வேண்டும். தற்போது வேளாண்துறையின் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் பங்குதாரர்களை இணைத்து வேளாண் ஆய்வு பணிகளை மேற்கொண்டு சர்வதேச அரங்கில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புகழை உயர்த்த வேண்டும்” என்று பேசினார். வேளாண் கழக பொருளாளர் இலங்கை மன்னன் நன்றி தெரிவித்தார்.