Skip to main content

‘அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குக’ - ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Annamalai University Teachers Staff Federation urges to pay salaries to employees

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு முதல்  தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலை சரி செய்வதற்காக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை தமிழக அரசின் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பணி நிரவல் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இதனால் ஊழியர்கள் வங்கி கடன் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் உள்ளிட்ட அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.  எனவே உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும்.  2013ல்  அரசே ஏற்ற பிறகு வருடத்திற்கு 3  முறை அல்லது 4  முறையாவது இதே போல் ஊதியத்தை தாமதமாக வழங்கியுள்ளனர்.  இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆசிரியர், ஊழியர்கள் ஆளாவதும் தொடர் கதையாக உள்ளது.

இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி 1996 பிறகு மாணவர் : ஆசிரியர், ஆசிரியர் : ஊழியர் என்ற விகிதத்தின் அடிப்படையில்  ஆசிரியர், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பதே இதற்கு காரணமாக தெரிகிறது.  எனவே அதற்கான பிளாக் கரண்ட் ஐ  உயர்த்தி   உடனடியாக ஆசிரியர்,  ஊழியர் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் சொற்ப ஊதியம் பெறும் கடைநிலை சி, டி பிரிவு ஊழியர்களை அயற் பணியிட மாற்றம் செய்யக்கூடாது. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் கேட்டபோது சென்னையில் இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

சார்ந்த செய்திகள்