annamalai university minister speech

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் மருந்துக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் இன்று (25/06/2022) நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு கருத்தரங்கைத் துவக்கி வைத்தார்.

முன்னதாக, பல்கலைக்கழக அறிவியல் துறைத் தலைவர் ராமசாமி, அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதிக மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்து வருகிறது தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளனர்.

இது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்குத் தமிழக முதல்வர், 'நான் முதல்வர்' திட்டத்தை உருவாக்கி மாணவர் சமூகத்திற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பது தாமதமாகிறது. அதே நேரத்தில் கணினி அறிவியலையும் தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு விரைவில் கண்டுபிடிக்க முடிகிறது. இந்தக் கரோனா நேரத்திலும் மருந்து கண்டுபிடித்ததில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சிறந்து விளங்கியது.

Advertisment

தகவல் தொழில்நுட்பம் இல்லாதத் துறையே இல்லை. அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் பரவியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை மொபைல் போன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தமிழக முதல்வர் தகவல் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்" என்று பேசினார்.