Skip to main content

அரசு அலட்சியப்படுத்தினால் போராட்டம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

annamalai university medical college students congress party ks alagiri


அரசு அலட்சியப்படுத்தினால் மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே வசூலிக்கக்  கோரி, கடந்த 46 நாட்களாகப் பெற்றோர்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள்.

 

மாணவர்கள் விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர். துணை முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பாக மாணவர்கள் மனு அளித்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது என்று மாணவர்கள் வேதனைப்படுகிறார்கள்.

 

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் போராடுவதில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013- ஆம் ஆண்டு முதல், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அரசால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைவிட, 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளைவிட 3 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

கடந்த 2013 முதல் 2020- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் மற்றும் நிதியாகத் தமிழக உயர் கல்வித்துறை வழங்கியுள்ளது. மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் மற்றும் உதவியை விட, இது 45 முதல் 50 சதவிகிதம் அதிகமாகும். 

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதைத் தமிழக அரசு கண்டுபிடித்தது. இதனையடுத்து, பழைய நிர்வாகம் முற்றிலும் கலைக்கப்பட்டு, உயர் கல்வித்துறை அமைச்சர் சார்பு வேந்தராக நியமிக்கப்பட்டார்.

 

இந்த மருத்துவக் கல்லூரி 1929- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 2013- ஆம் ஆண்டு வரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி வரை அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2013 முதல் 2021- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.

 

அரசின் உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கிய போதிலும், பல்கலைக்கழகத்துக்கு ஆகும் செலவில், 10-ல் ஒரு பங்கு மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமாக மாணவர்களிடம் ரூபாய் 1 லட்சம் வரை வசூலித்தபோதும், தேர்வுக் கட்டணத்துக்கு ஆகும் செலவில், 11 இல் 1 மடங்கு மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.

 

அரசிடமிருந்து ரூபாய் 2 ஆயிரத்து 500 கோடி வரை மானியம் பெற்ற போதிலும், கல்விச் செலவுக்காக 10 இல் ஒரு பங்குத் தொகையை மட்டுமே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஒதுக்குகிறது. ஒட்டுமொத்த தொகையையும் பயன்படுத்திக் கொள்ளாமல், மொத்த செலவையும் மாணவர்கள் கல்விக் கட்டணத்திலிருந்து ஈடுசெய்வது எந்த வகையில் நியாயம்?

 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 13,600 ரூபாயும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு 11,610 ரூபாயும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், எம்.டி/எம்.எஸ் படிப்புக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

அதேசமயம், அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரமும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 7 லட்சத்து 8 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டண நிர்ணயம் நியாயமற்றது, பாரபட்சமானது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண அளவையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும்.

 

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலோர் ஏழ்மையான மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கல்விக்கடன் பெற்றே இவர்கள் இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்த போதிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விடக் கல்விக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

cnc

 

இந்த அநீதியை எதிர்த்துத் தான் கடந்த 46 நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 20- ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அவர்கள் தொடர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மனசாட்சியுடன் பரிசீலித்து உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிக்குமாறு  தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்த கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்துமேயானால், அவர்களுக்குத் தோள் கொடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டக் களத்தில் குதிக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்'. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.